Friday, December 19, 2008

நேசிக்கிறேன்...




பூவின்
இதழ்களில்வழியும்
பனித்துளியை
நேசிக்கிறேன்...





பனித்துளியில்
மின்னும்
பகலவனை
நேசிக்கிறேன்...






கடலின் அலைகளில்
தெறிக்கும்
நிலவின் ஒளியை
நேசிக்கிறேன்...



மழை நீரில்
மாண்டு போகும்
நீர்க்குமிழிகளை
நேசிக்கிறேன்...



மூச்சை நமக்குத்தந்தே
முதிர்ந்து போன‌
சருகுகளை
நேசிக்கிறேன்...

இந்த இயற்கையை
நமக்குத்தந்த‌
இறைவனை
நேசிக்கிறேன்...




இயற்கையை நேசிக்கும்
எந்த உள்ளத்தையும்
நான்
நேசிக்கிறேன்....

Wednesday, December 17, 2008

மழைக் காலங்களில்...




குடையின்றி மழை துவங்கியது அன்று மாலை...
நடைபாதை வழியில் என்னுடன் நீ...
நாளும் இடைவெளி விட்டு நடந்து செல்லும் நம்மை
அன்று நெருங்கி வரச்செய்திருந்தது மழைச்சாரல்...
அடைமழையில் அதிவேகமாய் கடந்துச்சென்ற பலர்
விரல் கோர்த்து வெகுபொறுமையாய் நடக்கும் நமக்காய்
புருவம் உயர்த்தி ஆச்சர்யம் காட்டினர்...
யாருக்கும் புரியவே இல்லை...
அங்கே சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டிருந்தது காதல்தான் என்று...
அன்றைய மழை தூறிய அந்த மாலைப் பொழுதை
மனதுக்குள் பொதித்து வைத்தேன் ஒருவரும் அறியாமல்....

Monday, December 15, 2008

காத்திருப்புகள்



நகம் கடித்து கடித்து நகர்கின்றன மணித்துளிகள்...
செய்கின்ற செயலில் செல்லாது சிதறும் என் எண்ணங்கள்...
அலைபேசி மேல் பதிந்து மீளும் பார்வைகள்...
தொணதொணக்கும் தோழிக்கு பதிலாய் அசட்டுச்சிரிப்புகள்...
நீ சொன்ன நேரம் கடந்து எத்தனை நேரம் ஆகி விட்டது என்று
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
அவஸ்தை அவஸ்தையாய் நீள்கின்றன எனது காத்திருப்புகள்...
சீக்கிரம் CALL செய்து விடேன்....
காத்திருக்கின்றன என் காதுகளும் காதலும்....

மாலை மலரும் இந்நோய்....





காதினோர‌ம் உன் குரல் கேட்கையில் செவிமடல்கள் மலர்ந்துப் போகும்…

மெல்லியதாய் விழும் வார்த்தைகளில் என் நிலை மறந்துப்போகும்…

செவி சுமக்கும் முத்த சப்தங்கள் காற்றில் தடங்களற்று கரைந்து போகும்…

நிதர்சனப்பரிமாணம் உணரா கணங்கள் அழகான‌ கற்பனைகளில் கனன்றுப்போகும்...

உன் செல்லப்பெயர் அழைப்புகளில் தொட்டில் குழந்தையாய் மனம் தவழ்ந்துப்போகும்…

மறுதினம் முழுமையும் இதழ்கள் ஒளித்துகொண்ட புன்னகையுடன் மந்தகாசமாய் ஒளிரும்...

காதலின் செங்கோலில் கனவுகள் களமிறங்கி நம்மில் ஆதிக்கம் செலுத்த‌…

என் பொய்யான மறுப்புகளை மறைக்காமல் வெளிப்படுத்தித்தொலைக்கும் இந்த காதலுடனான‌ போராட்டம் தொடர...

கனவுகள் விரிந்து விரிந்து விடியலுக்குப்பின்னும் விழித்தங்கி...

ரகசியங்கள் பேசி பேசி தொலைந்து போகும் பல இரவுகளில்,

சிற்றின்பம் சிற்சில சமயங்களில் செவிவழியும் நுகரப்படுகிறது செல்போன்களில்...