Tuesday, October 15, 2013

Monsoon Wedding - மை டக்கு!

ரொம்ப நாள் கழிச்சு ப்ளாக் எழுதணும்னு ஆசை வந்துடுச்சு... கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு மூணு தடவை இது எழுதணும் அது எழுதணும்னு யோசிச்சாலும் ஏனோ எழுதவே இல்லை. திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் அத்தனை மாற்றங்கள்..... அய்யோடா. வாழ்க்கையில் கற்பனை கூட முடியாத யு டர்ன்கள். எல்லாத்தையும் தாண்டி லைஃப் போயிக்கிட்டு இருக்கு. ஒரு குட்டி பாப்பா வந்தாச்சு :). ஆதிரைன்னு பேர் வெச்சுருக்கோம். அவளோட செலவழிக்க நேரம் சரியாயிருக்கு.

ப்ரொஃபைல் நேம் மாத்தியிருக்கேன். காரணம், இந்த ப்ளாகர் ஐடி காலேஜ் எண்ட்ல நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்து ஆரம்பிச்சது. REENA = Revathy + Aruna.
என் ஃப்ரெண்டுக்கு இப்போல்லாம் ப்ளாக்கிங்க்கு டைம் கிடைக்கறதில்லை. நானும் ப்ளாக் பக்கமே வர்றதில்லை. ஒரு ப்ரொஃபஷனல் டச் + நாங்க வளர்ந்துட்டோங்கிறதுனால இந்த நேம் சேஞ்ச்.

இந்த மூணு வருஷத்துல சில நல்ல புக்ஸ் படிச்சப்போதும் , நல்ல படங்கள் பார்த்தப்போதும், சில முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தப்போதும் இங்க பகிர்ந்துக்கணும்னு நெனச்சிருக்கேன். ஏனோ முடியலை. கணவரோட சேர்ந்து நல்ல திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல, சமீபத்தில் பார்த்த ஒரு படம்தான் MONSOON WEDDING.

ஒரு சராசரி இந்திய கல்யாணமும், அதில் பின்னப்பட்டிருக்கும் கதாமாந்தர்களும், சம்பவங்களும்தான் கதை. அதை இப்படி கவிதை மாதிரி சொல்ல முடியுமான்னு ஆச்சரியப்ப்டுத்தியிருக்காங்க இயக்குனர் மீரா நாயர். பெண்களை மையப்படுத்தாமல், பல பிரச்சினைகளை அழகா கையாண்டிருக்காங்க. பழமைக்கும், நவீனமயமாக்கலும் நடுவில் சிக்கி தவிப்பது டீன் ஏஜர்ஸ் மட்டுமல்ல, பெரியவர்களும் தான் என பல காட்சிகளில் உணர முடிகிறது.

கதையை ஐந்து இழைகளாக பிரிக்கலாம்.

1. மணமகள் வசுந்தரா தாஸ்
           பிரபலமான ஒரு டிவி சேனலில் பணிபுரிபவர். அங்கு அவரது சீனியரான ஒருவரை, அவர் மணமானவர் என்று தெரிந்தும் சில பொய்யான வாக்குறுதிகளை நம்பியோ என்னமோ, காதலிக்கிறார். வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் செய்யும் போது, மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாலும் காதலனை மறக்க முடியவில்லை. மணநாளுக்கு முந்தைய இரவு காதலனை சந்திக்க முற்பட, காருக்குள் காதல் செய்யும் இருவரையும், ரோந்து போலீஸ் பிடித்து கொள்கிறது. போலீஸ்காரர்கள் வசுந்தராவை அசிங்கமான வார்த்தைகளால் துன்புறுத்த, காதலனோ தள்ளி நின்று போனில் மனைவியை சமாதானப்படுத்துகிறான். அவனது காதலின் ஆழத்தை கண்டு கொண்டவள் காரை எடுத்துக்கொண்டு தப்பி வீடு போய் சேர்கிறாள். அவனது கயமைத்தனம் வெளிப்படும் இடம், நச். பின் நேர்மையாக மணமகனிடம் நடந்ததை சொல்வதும், சந்தோஷமாக மணமுடிப்பதும் அழகு.

2. மணமகளின் தந்தை, நஸ்ருதீன் ஷா/ அம்மா பிம்மி வர்மா

             அப்பர் மிடில் கிளாஸ் வகுப்பை சேர்ந்தவர். மகளின் திருமணம், மகனின் படிப்பு பற்றி சராசரி கனவுகள் கொண்டவர். சேமிப்புகளை மகள் திருமணத்துக்காக மகிழ்ச்சியாக கரைத்தாலும், எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே என கவலைப்படுவதும், தன் அண்ணன் மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தான் அறியாமல் இருந்தது குறித்து மறுகும் போதும், பெண் இத்தனை சீக்கிரம் ஏன் பெரியவளாகி தன்னை பிரிகிறால் என்று ஏங்கும் போதும், ஒரு அழகான தந்தையை நாம் பார்க்க முடியும். ஐம்பது வயதுகளில் பல இந்திய தம்பதிகளுக்கு தாம்பத்ய வாழ்க்கை என்பது பல புற காரணிகளால் வாய்க்காமல் போய்விடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம். ஆரம்ப காட்சி ஒன்றில் அதிகாலையில் நெருங்கி கொஞ்சும் மனைவியை உணராமல் கூட உறங்குபவர், மனம் குழம்பி தவிக்கையில் மனைவி மடியில் ஆறுதலடையும் காட்சி, வாழ்க்கைத்துணையின் அவசியம் எப்போதுமே தேவை என்பதை கூறும். கடைசிக்காட்சியை இவர் எடுக்கும் தைரியமான முடிவு, பலே,

3. மணமகளின் அக்கா(கஸின்), ரியா வர்மா/ மோஹன் ராய்

             சிறுவயதிலேயே தந்தையை இழந்த  ரியாவின் கனவு எழுத்தாளராக ஆவது. யு எஸ்ஸில் அதற்காக படிக்க விரும்புகிறாள். அவர்களது குடும்ப நண்பர் மோஹன் ராய் தானே செலவுகளை ஏற்பதாக அறிவிக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்தாலும் ரியா ஏனோ அழுகிறாள். மோஹன் ராய் அடிக்கடி அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பென் குழந்தை அலியாவிடம் நெருக்கம் காட்டுவதை கண்காணித்துக்கொண்டே இருக்கிறாள். அலியா, ஒரு நாள் பெரியவர்கள் முத்தத்தை பற்றி விளையாட்டாக பேசி கொண்டிருக்கையில், அநாயாசமாக அளிக்கும் ஒரு பதிலை கண்டு ரியா அதிர்ச்சியடைகிறாள்/ எப்போதும் துறுதுறு குழந்தையாக இருக்கும் அலியா சமீப நாட்களாக சோர்ந்து போய் இருப்பதையும் அவள் உணர்கிறாள். தூக்க கலக்கத்தில் இருக்கும் அலியாவை, மோகன் ராய் காரில் ஏற்றி வெளியே கூட்டி செல்ல யத்தனிக்கும் வேளையில் வழி மறித்து அவரை பார்த்து கத்துகிறாள். கூட்டம் கூடி விடுகிறது. “எனக்கு நீ சின்ன வயதில் செய்த அநியாயம் போதாதா? இதில் உனக்கு என்ன கிடைக்கிறது” என அவள் கூச்சலிட அதை மோஹன் மறுக்கிறார். ரியா இனி இந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி வெளியேறுகிறாள். ரோட்டில் யாரோ ஒருவன் அவளை அசிங்கமாக கேலி பேசுகையில், விரலை உயர்த்தி ‘fuck you' என்பவள், குடும்ப நண்பரின் முகத்திரையை கிழிக்க முடியாமல் தவிக்கும் முரண், அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ரியாவின் கண்கள் உயிர்ப்புடன் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அசாத்தியமானவை.

4.அலிஸ் - பணிப்பெண்/ வெட்டிங் ப்ளானர் பி. கே. தூபே

      மணமகள் வீட்டில் வேலை செய்யும் பெண். அவளுக்கு கல்யாண ஏற்பாட்டாளர் தூபேயை பார்த்ததும் மையல். தூபேக்கும் அவளை மிகவும் பிடிக்கிறது. மணமகளின் அறையை சுத்தம் செய்ய போகும் அலிஸ், அங்கிருக்கும் அவளது நகைகளை பயமும் ஆசையுமாக எடுத்து அணிந்து அழகு பார்க்கிறாள். கண்ணாடியில் ஒரு இளவரசியின் ஒய்யார மிடுக்குடன் அவள் பார்க்கும் அழகு, கவிதை. அதை வெளி ஜன்னல் வழி தூபேயும் ரசிக்கிறான். அவன் என்ன பார்க்கிறான் என தெரிந்து கொள்ல ஆவலுடன் எட்டி பார்க்கும் அவன் உதவியாளர்கள் அலிஸை பார்த்து திருடி திருடி என கத்த, பயத்தில் உறைந்து போகிறாள் அலிஸ். தூபே “அவள் திருடி இல்லை” என அவர்களை திட்டி துரத்துகிறான். எனினும் அவள் அந்நிகழ்ச்சிக்கு பிறகு தூபேயை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. மிகவும் வருந்தும் தூபே, அந்த வீட்டின் மணநாளன்று, ஒரு அழகான செவ்வந்திப்பூ பொக்கேயை கொடுத்து தன்னை மணக்க சொல்கிறான் அலிஸிடம். ஆடம்பரமான அந்த திருமண களேபரத்தின் ஓரத்தில், எளிமையாக இவர்கள் மணக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் காட்சிகள் செவ்வந்திப்பூக்களால் நிறைக்கப்பட்டு ஒளிரும்

5. அயிஷா/ராகுல்

 மணவீட்டின் இளசுகள். சாடாரண காதல் கதை. . ஃபாரின் ரிட்டர்ன் ராகுலை நஸ்ருதீன் ‘இடியட். யூஸ்லெஸ்’ என திட்டிக் கொண்டே இருக்க, ஆயிஷா அவனுக்கு ஒரு நாள் உதவி செய்து நட்பாகிறாள். இளவயதுகளின் பட்டாம்பூச்சிகள் பறக்கும் காதல், உடல் உரசல்களுடன் தொடர்கிறது. ராகுலின் வெளிநாட்டு வளர்ப்பு இந்திய கலாச்சாரத்தில் ஒட்ட மறுப்பதை ஆய்ஷா காட்டமாக கூறி விட, கடைசியில் தேஸி நடனத்தில் பங்கேற்கிறான்.


திரைக்கதை தொய்வில்லாமல், நகைச்சுவை, திருப்பம் என அனைத்தும் கொண்டு கையாளப்பட்டிருப்பதும், மனிதர்களை எந்த மேல்பூச்சுமில்லாமல் வெளிப்படுத்தியிருப்பதும் மிகவும் அருமை. MONSOON WEDDING இந்திய சினிமா வரலாற்றில்  மிக முக்கியமான படம்என்றே எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment