Monday, March 14, 2011

என் தங்கை கல்யாணி 1


இன்று மெயிலில் வந்திருந்த அவளின் திருமண அழைப்பிதழை மீண்டும் ஒரு தடவை பார்த்தான் பிரகாஷ். ’எப்படி சம்மதிச்சே பிருந்தா? தொடர்ச்சியா ஒரு வாரம் பார்க்க முடியாம போனாலே கஷ்டமா இருக்குன்னு சொல்லுவியே! இனி காலம் முழுக்க நாம பார்த்துக்க முடியாதே. என்னை பார்க்காம ஆறு மாசம் இருந்துட்டதால பிரிவு அத்தனை லேசாயிடுச்சா உனக்கு’ என்றெல்லாம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தான். ஏற்கனவே கசக்க ஆரம்பித்திருந்த வெளிநாட்டு வாழ்க்கை இந்த கணம் முதல் முழுதாய் வெறுத்து போய் விட்டது. மாதம் ஒரு லட்ச ரூபாய் வாங்க இன்னும் எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும்.... என்னால் இனி இன்னொரு பெண்ணை மணந்து மனமொத்து வாழ முடியுமா? இதே காதல் அவளிடம் வருமா?? என ஆயிரம் கேள்விகள் மனதுக்குள்.

பிருந்தாவையும் குறை கூற முடியாது. ’அவன் நிறைய சம்பாதிச்சுட்டு வந்ததும் அவங்க வீட்ல உன்னை கல்யாணம் பண்ண ஒத்துக்குவாங்கன்னு எப்படி நம்பறே!! இவனுக்காக மூணு வருஷம் காத்திருந்த பின்னாடி இவன் கைவிட்டுட்டான்னா உனக்கு வயசு இருபத்தேழு ஆகியிருக்கும். இப்ப வர்ற மாப்பிளையும் கூட அப்போ வர மாட்டான். அப்புறம் ஏதாவது கிழவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று அவள் அப்பா சொல்லியதை சொல்லி, “என்னை எதுக்காகவும் விட்டுட மாட்டேல்ல” என்று ஒரு மாதம் முன்பு போனில் அழுதவள், எதை நினைத்து குழம்பி இந்த முடிவி எடுத்தாளோ...

அவர்களது கடைசி சந்திப்பு நடந்த கடற்கரை காட்சி நினைவிற்கு வந்தது...

”நீங்க கண்டிப்பா மொரிஷீயஸ் போய்த்தான் ஆகணுமா பிரகாஷ்?” என்று நூறாவது முறையாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்தான் பிரகாஷ்.

“எனக்கும் கஷ்டமாத்தான்மா இருக்கு. ஆனா இப்போ இங்கே வாங்கற சம்பளத்தில ஒரு மாசத்தை ஈசியா கடக்கறது மட்டும் தான் முடியுமே தவிர, சேமிப்புல்லாம் சாத்தியமே இல்லை. உனக்கே தெரியும். இப்போதைக்கு எங்க வீட்டில நான் மட்டும் தான் சம்பாதிக்கறவன். என் சேமிப்புகளில் தான் தங்கை கல்யாணம் நடந்தாகணும். அவளுக்கும் 25 வயசாகுது. புது வேலையில மாதம் 1 லட்சம் சம்பளம். 3 வருஷம் அங்க இருந்தாக் கூட போதும். நம்மளோட எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்து சம்பாதிச்சுடுவேன் பிருந்தா. என்னை புரிஞ்சுக்கோ... ”

“புரியுது... ஆனா எங்க வீட்ல அத்தனை நாள் காத்திருக்க மாட்டாங்களே! இப்பவே நம்ம விஷயம் ஓரளவு தெரிஞ்சு குதிகுதின்னு குதிச்சுட்டு இருக்காங்க! எங்க ஜாதில இப்பல்லாம் பொண்ணே கிடைக்கறதில்லையாமாம். அத்னால நல்ல வரன் ஏதும் வந்தா இவங்க டார்ச்சர் தாங்க முடியறதில்லை. நீங்களும் கூட இல்லாட்டி நான் என்ன சொல்லி சமாளிப்பேன்?”

“அடுத்த வருஷ லீவுக்கு இந்தியா வரும் போது நம்ம கல்யாண நியூஸோட தான் வருவேன். ஒகேவா? அதுவுமில்லாம, எந்தங்கச்சி கல்யாணம் நடந்தாத்தானே நம்ம கல்யாணம் நடக்க முடியும்?”

“அதுவும் சரிதான். சரி நான் ஏதாவது படிக்கிறதா சொல்லி காலம் கடத்துறேன். வேறென்ன செய்ய? ஆனா, ஒரு வருஷம் எப்படி உங்களை பார்க்காம இருக்க போறேன்னு தான் தெரியல” என சொல்லும் போதே குரல் உடைந்து தேம்ப ஆரம்பித்தாள் பிருந்தா. எப்போதுமே இருவரும் பிரிந்து அவரவர் வீட்டுக்கு செல்கையில் அழுபவள் தான் அவள். ஒரு சில நாட்கள் பிரிவதற்கே அப்படி என்றால் இப்போது கேட்கவா வேண்டும். அவளை தேற்றி, அந்தி சாய்ந்த இருட்டில், சில எச்சில் முத்தங்கள் கொடுத்து அனுப்பிய காட்சி இன்றும் அவன் மனதில அழுத்தமாய் படிந்து கிடந்தது.

‘என்ன யோசிச்சு இனி என்ன ஆகப்போகுது?இதோ இன்னும் இருபது நாட்களில் ஊருக்கு போக வேண்டும். தங்கை கல்யாணத்துக்காக.. சட்டென்று நிச்சயமாகி விட்டது இத்தனை நாள் இல்லாமல். இரு வருடம் எனக்காக காத்திருந்தவள் இன்னும் ஒரு 25 நாட்கள் காத்திருக்காமல் போய் விட்டாள். தங்கை கல்யாணம் முடிந்த அடுத்த நாள் உன்னை இழுத்துட்டு போயிருப்பேனேடி என் தங்கம்... அத்தனை அதிரடியெல்லாம் உன்னை மாதிரி சீன் பார்ட்டிகளுக்கு சாத்தியமில்லை என்று சொன்ன மனதை புறக்கணித்தான். பேச்சிலர் வாழ்க்கை இன்றுதான் எப்போதையும் விட நரகமாய் உறைத்தது. எந்த சுவையும் இல்லாமல் இன்னும் எத்தனை நாள் நீளுமோ இது என்று புதிதாய் நெஞ்சில் பயம் பூத்தது. இதோடு இந்த வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு போய் விடலாமா? ஆனால் நான் எழுதிக்கொடுத்த 3 வருட ஒப்பந்தத்தை உடைக்க சில பல லட்சங்கள் அழ வேண்டுமே. அதற்கெங்கே போவது? இனி அங்கு போய்த்தான் என்ன ஆகப்போகிறது’ என்று நினைவுகளை வேரறுக்க முயற்சித்தான்

********

தங்கை கல்யாணத்தை முடித்து மீண்டும் இங்கு வந்து 6 மாதம் ஓடி விட்டது. தங்கை கல்யாணத்துக்கு ஒரு பத்து நாள் தள்ளி தான் பிருந்தாவின் கல்யாணம். அவளை நேரில் பார்த்து பேசி, மனதை மாற்றி, தன்னுடன் வருமாறு செய்யலாமா? என மனதுள் ஒரு நப்பாசை பூத்தது. ஆனால் செய்யவில்லை... இந்த மாதிரி என் தங்கை கல்யாணம் நின்றால் எத்தனை பேருக்கு அவமானம் என்றெல்லாம் எப்போதும் போல யோசித்ததின் பலன், அந்த ஆசைக்கு முழுக்கு போடப்பட்டது. வாழ்க்கை அதன் போக்கில் செல்லட்டும் என்ற இயலாமைதான் மிச்சம்.

ஏதோ நாட்கள் ஓடுகின்றன. உண்டு, உறங்கி, வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டி, கூட வேலை செய்பவர்களின் பொறாமைக்கு ஆளாகி, எல்லாம் எப்போதும் போல் தான் நடக்கின்றன. ஏதோ அங்கே 3 ஜீவன்களாவது என்னால் சந்தோஷப்படுகிறதே என தன் குடும்பத்தாரை பற்றி நினைத்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு அப்பாவிடமிருந்து ஃபோன். பொதுவாக அவன் தான் இரவுகளில் போன் செய்வான். என்ன இன்று விசேஷம் என யோசித்துக்கொண்டே, “சொல்லுங்கப்பா. எப்படி இருக்கீங்க” என்றான்......

(தொடரும்....)

10 comments:

  1. >>>ஏதோ நாட்கள் ஓடுகின்றன. உண்டு, உறங்கி, வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டி, கூட வேலை செய்பவர்களின் பொறாமைக்கு ஆளாகி, எல்லாம் எப்போதும் போல் தான் நடக்கின்றன.

    எந்திர மயமான மனித வாழ்க்கை

    ReplyDelete
  2. ஆமாம் தொடர்கதைதான் குறிப்பிட மறந்து போனேன்

    ReplyDelete
  3. super....
    seekkiram adutha post podunga....

    ReplyDelete
  4. தொடர்கதை.அருமை.தொடருங்கள்.

    ReplyDelete
  5. வழக்கம் போல கலக்குறீங்க...
    வழக்கம் போல காணாம போயிர்றீங்க..

    Reverie
    http://reverienreality.blogspot.com/
    (இனி தமிழ் மெல்ல வாழும்)

    ReplyDelete
  6. hii.. Nice Post

    Thanks for sharing

    More Entertainment

    For latest stills videos visit ..

    ReplyDelete