Thursday, May 7, 2009

என் இனிய சுஜா... 1

"என்னடா ராதி? இப்படி யோசிக்கறே? ஏதாவது பதில் சொல்லு!" என்று என் கனனத்தை நிமிண்டிய கணவரை நிமிர்ந்து பார்த்தேன். "உடனே பதில் சொல்லுனு கேட்டா என்னங்க சொல்ல முடியும்? இது எந்த அளவு சரியா வரும்னு எனக்கு தெரியலை! ஒரு குழந்தையைதத்தெடுக்கிறது அப்படிங்கறது அத்தனை சாதாரணமான விஷயமில்லைங்க!" என்றவளை, "உண்மைதான் ராதிகா! ஆனா நமக்கு குழந்தை பிறக்குமானு உறுதியா தெரியல. உனக்கு குழந்தைன்னா எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும்! நமக்கு வயசும் முப்பத்தைந்தை தாண்டியாச்சு! இப்போ தத்தெடுத்தா அதை வளர்த்து ஆளாக்க வயசு சரியா இருக்கும்!ஒரு குழந்தை இல்லாம வாழ்க்கை முழுமையடையும்னு எனக்கு தோணலை ராதி! நம்க்கு குழந்தை பிறக்கலைங்கற காரணாத்துக்காக வாழ்க்கையோட இனிய சுவாரசியங்களை நாம ஏன் இழக்கணும்? அதை விட, ஒரு குழந்தையை தத்தெடுக்கிறோம்னா அதுக்கும் ஒரு புது வாழ்க்கை கிடைக்கணும்ல?" என்றார் சேகர்.
"சரி! நாம் அந்த குழந்தைக்கு நிஜ அப்பா அம்மா இல்லனு தெரிஞ்சா பிற்காலத்தில் அதனால பிரச்சினை எதுவும் வராதா?" "இல்லம்மா!லீகல் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் சரியா செஞ்சுடுவோம். பிற்காலத்தில் அவசியமேற்பட்டா அந்த குழந்தைக்கு உண்மையை சொல்லுவோம். இல்லைனா நாமே அப்பா அம்மாவா கடைசி வரை இருந்துட்டு போவோம். என்ன பிரச்சினை? அந்த குழந்தை வள‌ர்ந்த சொன்னாக்கூட அதுக்கு புரிஞ்சுக்கற மனப்பக்குவம் வந்துடும் ராதிகா! நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை!எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம்?" என்று சேகர் எத்தனை தான் என்னை சமாதானப்படுத்த முயன்றாலும் ஏனோ எனக்குள் ஒன்று மறுத்துக் கொண்டேயிருந்தது. சில நாட்களில் மறுப்பதற்கு என்ன கார‌ணம் இருக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கினேன்.



உறவுகளின் நச்சரிப்பால் பல சமயம் தனிமையில் அழுகை என் வழக்கமாயிற்று. எங்கே அவர்கள் மத்தியில் நான் உருக்குலைந்து விடுவேனோ என்று சேகருக்கு பயமாகி விட மிகுந்த முயற்சியின் பேரில் டெஹ்ராடூனுக்கு மாற்றலாகி வந்தோம் இருவரும். புதிய இடம்... புதிய சூழல்... தெரியாத மனிதர்கள்... வாழ்க்கை மீண்டும் சுவாரசியமாக ஆரம்பித்தது எங்களுக்கு... சேகரின் அன்பும் அரவணைப்பும் காலம் மறக்க செய்தன. குளிர் பிரதேசத்தில் நெருக்கம் மேலும் இயல்பாய் மலர்ந்தது. குறைகள் மறந்து வாழ்க்கை வெகு இயல்பாய் மாறிப்போனது. அவரை நான் எப்போதும் விட அதிகமாய் நேசித்தேன். ஆனாலும் வருடங்கள் கடக்க, சில நேரங்களில் ஏதும் இட்டு நிரப்ப முடியாத வெறுமையொன்று எங்களது அழகான வீட்டிலும், ஏன், உறவிலும் கூட நிலவுவதாய் தோன்றும். அதை குழந்தை இல்லாதவர்களால் மட்டுமே உணர முடியும்
நாளடைவில் சில நேர வெறுமைகள் நீள ஆரம்பித்தன. அத்தகைய ஒரு பொழுதில்தான் சேகர் குழந்தையை தத்தெடுப்பதை பற்றி என்னிடம் பேசத்தொடங்கினார்.ஒரு நாள் எனக்கும் இந்த யோசனையில் சம்மதம் தோன்ற, இருவருமே சென்னைக்கு கிளம்பினோம். அங்கே உள்ள ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் தத்தெடுக்க அவருக்கு விருப்பம். அந்த அமைப்பை பற்றி சேகருடைய நண்பர் ஒருவர் சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தார் குறிப்பாக அமைப்பின் நிறுவனரைப்பற்றி. அவரைப் பார்த்து பேசியதுமே, சர்ட்டிஃபிகேட் எத்தனை உண்மை என்று புரிந்தது. நாங்கள் சில மாதங்கள்/நாட்கள் வயதேயான குழந்தையையே தத்தெடுக்க விரும்பினோம். அப்போதுதான் குழந்தைக்கு எங்கள் மீதான பிடிப்பு இயல்பாக வரும் என நினைத்தோம்.
அதிர்ஷ்டவசமாக அப்படி 2 மாதங்களேயான ஒரு பெண் குழந்தை அங்கே இருக்க ஒரு வக்கீலின் உதவியுடன் தத்தெடுப்பிற்கான ஃபார்மலிட்டீஸ் முடிக்கப்பட்டன. சேகர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். "அழகா இருக்கால்ல ராதி குட்டிப்பாப்பா?" என்ற அவர் முகத்தை பார்க்கையில் எனக்குமே சந்தோஷமாய் இருந்தது. குழந்தையின் பிறப்பு விவரங்கள் எதுவுமே அந்த இல்லத்தில் அறிந்திருக்கப்படவில்லை. மெடிக்கல் காரணங்களுக்காக கேட்ட போது, "illegitimate child" என்ற ஒற்றைப்பதில் தான் கிடைத்தது. என் கைகளில் இருந்த அவளை பார்த்தேன். ரோஜாப்பூ குவியலாய் மலர்ந்தது போலிருந்தது. என்ன முத்திரை இது? "illegitimate child??" இவளுக்கு தெரியுமா இது? சிலர் வருடக்கணக்காய் தவமிருக்க, வேண்டாத இடத்தில் பிறந்து புறக்கணிக்கப்பட்டு... நினைக்கவே வலித்தது எனக்கு.
குழந்தையுடன் நாங்கள் டெஹ்ராடூனுக்கு வந்து 2 மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் ரோஜாப்பூ குவியலுக்கு "சுஜா" என்று பெயரிட்டுள்ளோம். குழந்தை ஒவ்வொரு நாளும் புதிதாய் வளர்வது போலிருந்தது. இப்போது தான் தலை கொஞ்சம் நின்றிருக்கிறது. எங்களுக்கு பொழுதெல்லாம் இவளுடன் தான் போகிறது. நான் என் வேலையையும் ராஜினாமா செய்தாகி விட்டது. சுஜாக்குட்டி நன்றாக விழித்து விழித்து எங்கள் முகங்களை பார்க்கிறாள். நான் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருக்க அடிக்கடி அவளது பொக்கை வாய் திறந்து சிரிக்கிறாள். அந்த ஒரு சிரிப்பு போதும் அவளுக்கு எல்லாரையும் கவர்ந்திழுக்க...
சேகருக்கு ஆஃபீஸை தவிர மற்ற நேரமெல்லாம் சுஜாதான். அவளை கொஞ்சுவதற்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் பிறக்கும் என்றே தெரிவதில்லை.நித்தம் ஒரு புதுப்பெயர்தான் அவளுக்கு அர்த்தம் புரியாத அழகு மொழிகளில்.. எல்லாவற்றுக்கும் அவளது பதில் விழிப்பும், சின்ன சிரிப்பும் தான். அவளை இங்குள்ள குழந்தைனல மருத்துவரிடம் காட்டியதில் சில இரத்த பரிசோதனைகள் அவசியம் என்று செய்ய சொன்னார்.hஇவ் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த. மேலும் கொஞ்சம் மாறுகண் போல இருக்கிறது என்று கண் பரிசோதனை வேறு குட்டிமாவிற்கு. அங்கே அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்ட பின்பு நாங்கள் நிம்மதியாக மூச்சு விட்டோம்.சுஜாக்குட்டி இப்போது நன்கு கொழுக் மொழுக் என்றிருக்கிறாள். குழந்தை கொஞ்சம் ஓவர்வெயிட் என்று டாக்டர் சொல்ல அப்படி ஒரு கோபம் வந்து விட்டது அவருக்கு. "உங்களை ஓவர்வெயிட்டுனு சொன்னால் கூட இவ்ளோ கோபம் வராது போல உங்களுக்கு" என்று அவரை சீண்டிக்கொண்டிருந்தேன் அன்று முழுதும்.
மருத்துவர் அறிவரைப்படி அவளுக்கான "artificial milk formulations" எல்லாம் கரைத்து புகட்ட கற்றுக்கொண்டேன்.அவளுக்கு புட்டிப்பால் புகட்ட அவள் சின்ன அதரங்கள் திறந்து "சப் சப்" என்று சப்தமிட்டு அதை குடித்துக்கொண்டே என்னைப் பார்த்து விழிக்கையில் எல்லாம் என்னுள் சிறு சிறு நெகிழ்வுகள் தோன்றும். "என்னால் இவளுக்கு பால் புகட்ட முடியவில்லையே" என்று வருந்துவதுமுண்டு. தத்தெடுத்த குழந்தையிடம் என்னால் முழுமையாக அன்பு செலுத்த முடியுமா என்ற என் பழைய சந்தேகங்களையெல்லாம் தன் பிஞ்சுக் கால்களால் உதைத்துக்கொண்டிருக்கிறாள் என் சுஜாக்குட்டி.
தோளில் சாய்த்துக்கொள்கையில் என் முந்தானையெல்லாம் ஜொள்ளு விட்டு ஈரமாக்குவாள். என்னுள் தாய்மை பெருகச் செய்யும் வித்தைகளை எல்லாம் அவள் தன் சின்ன சின்ன விரல்களிலே வைத்திருப்பதாக சில சமயம் எண்ணுவேன். வாழ்க்கை வெகுவாக மாறி விட்டிருந்தது எனக்கும் அவருக்கும். சுஜாக்குட்டி எங்கள் நெருக்கத்தை பல மடங்கு அதிகரித்து விட்டிருந்தாள். மீண்டும் புதிதாய் வாழத்தொடங்கியது போலிருக்கிறது.

அன்று... அவர் ஆஃபீஸ் கிளம்பி விட்டார். என் வேலைகள் எல்லாம் முடிந்து சுஜாக்குட்டிக்கு பால் புகட்டிக்கொண்டிருந்தேன். திடீரென டெலிஃபோன் அலற, சுஜாக்குட்டியை பத்திரமாக தொட்டிலில் கிடத்தி விட்டு, எழுந்து சென்று ரிஸீவரை எடுத்து "ஹலோ" என்றேன் சுஜாவின் மீது ஒரு கண் வைத்தப்படியே. "மிஸஸ் ராதிகா சேகர்?" என்றது மறுமுனை. "எஸ்" என்றேன். "வீ ஆர் ஸாரி டூ சே திஸ். உங்கள் கணவருக்கு அலுவலகம் வரும் வழியில் ஒரு மோசமான சாலை விபத்து நேர்ந்து விட்டது.கார் லாரியில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.இப்போது அவர் உடல் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வந்தீர்களானால்..." போனில் ஆங்கில வாக்கியங்கள் தொடர்ந்து கொண்டே போக, என் மனதில் அவற்றுக்கான தமிழாக்கங்கள் எப்போதோ நின்றுப்போயிருந்தன.

6 comments:

  1. சூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ரா போகுது கதை. தொடர்கதையினு இருக்கு? அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க?

    கதை ஆரம்பித்த விதம் அருமை. விறுவிறுப்பா போன கதையில் கடைசியில் ஒரு குண்டை போட்டீங்க பாருங்க...அதிர்ந்துபோயிட்டேன்:(

    //என் மனதில் அவற்றுக்கான தமிழாக்கங்கள் எப்போதோ நின்றுப்போயிருந்தன.//

    what a phrase akka!! அப்படி உணர்ச்சிகளை கண் முன் கொண்டுவந்துட்டீங்க:)

    ReplyDelete
  2. மழலை மொழியை மொழி பெயர்த்தத்து போல் சென்ற கதையின் இறுதியில் வந்த வரிகளில் சோகம் மனதை அழுத்தியது...

    ReplyDelete
  3. //ஆங்கில வாக்கியங்கள் தொடர்ந்து கொண்டே போக, என் மனதில் அவற்றுக்கான தமிழாக்கங்கள் எப்போதோ நின்றுப்போயிருந்தன.//

    நிறைய கதை எழுதி பழக்கப்பட்டவர்களால் தான் இப்படி ஒரு இடத்தில் தொடர்கதையை முடிக்க முடியும்...அருமையான நடை ரீனா...கதையின் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  4. Thamizhmaangani said...
    சூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ரா போகுது
    .
    .
    .
    what a phrase akka!! அப்படி உணர்ச்சிகளை கண் முன் கொண்டுவந்துட்டீங்க:)

    ரீனா said...
    நன்றி காயத்ரி:)))

    ReplyDelete
  5. புதியவன் said...
    நிறைய கதை எழுதி பழக்கப்பட்டவர்களால் தான் இப்படி ஒரு இடத்தில் தொடர்கதையை முடிக்க முடியும்...அருமையான நடை ரீனா...கதையின் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...

    ரீனா said...
    நன்றி புதியவன்:))) தங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் உற்சாகம் தரும் தருகைக்கும்...

    ReplyDelete
  6. இரு பாகத்தையும் மாற்றி படித்தேன்... உங்கள் தலைப்பு குழப்பமாக இருந்தாலும் கதை படிக்கும் பொழுது அப்படியொரு குழப்பம் எனக்கு நேரிடவில்லை.

    சேகரின் இறப்பு, இராதிகாவின் இழப்பு, சுஜாவின் அடுத்த நிலை எனும் பரபரப்பை தொடர்கதையின் ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கிறீர்கள்.

    அடுத்தடுத்த பாகத்தில் பலவும் எதிர்பார்க்கிறேன்...

    தொடருங்கள். வாழ்த்துகள்..

    ReplyDelete