Thursday, May 7, 2009

என் இனிய சுஜா... 1

"என்னடா ராதி? இப்படி யோசிக்கறே? ஏதாவது பதில் சொல்லு!" என்று என் கனனத்தை நிமிண்டிய கணவரை நிமிர்ந்து பார்த்தேன். "உடனே பதில் சொல்லுனு கேட்டா என்னங்க சொல்ல முடியும்? இது எந்த அளவு சரியா வரும்னு எனக்கு தெரியலை! ஒரு குழந்தையைதத்தெடுக்கிறது அப்படிங்கறது அத்தனை சாதாரணமான விஷயமில்லைங்க!" என்றவளை, "உண்மைதான் ராதிகா! ஆனா நமக்கு குழந்தை பிறக்குமானு உறுதியா தெரியல. உனக்கு குழந்தைன்னா எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும்! நமக்கு வயசும் முப்பத்தைந்தை தாண்டியாச்சு! இப்போ தத்தெடுத்தா அதை வளர்த்து ஆளாக்க வயசு சரியா இருக்கும்!ஒரு குழந்தை இல்லாம வாழ்க்கை முழுமையடையும்னு எனக்கு தோணலை ராதி! நம்க்கு குழந்தை பிறக்கலைங்கற காரணாத்துக்காக வாழ்க்கையோட இனிய சுவாரசியங்களை நாம ஏன் இழக்கணும்? அதை விட, ஒரு குழந்தையை தத்தெடுக்கிறோம்னா அதுக்கும் ஒரு புது வாழ்க்கை கிடைக்கணும்ல?" என்றார் சேகர்.
"சரி! நாம் அந்த குழந்தைக்கு நிஜ அப்பா அம்மா இல்லனு தெரிஞ்சா பிற்காலத்தில் அதனால பிரச்சினை எதுவும் வராதா?" "இல்லம்மா!லீகல் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் சரியா செஞ்சுடுவோம். பிற்காலத்தில் அவசியமேற்பட்டா அந்த குழந்தைக்கு உண்மையை சொல்லுவோம். இல்லைனா நாமே அப்பா அம்மாவா கடைசி வரை இருந்துட்டு போவோம். என்ன பிரச்சினை? அந்த குழந்தை வள‌ர்ந்த சொன்னாக்கூட அதுக்கு புரிஞ்சுக்கற மனப்பக்குவம் வந்துடும் ராதிகா! நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை!எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம்?" என்று சேகர் எத்தனை தான் என்னை சமாதானப்படுத்த முயன்றாலும் ஏனோ எனக்குள் ஒன்று மறுத்துக் கொண்டேயிருந்தது. சில நாட்களில் மறுப்பதற்கு என்ன கார‌ணம் இருக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கினேன்.



உறவுகளின் நச்சரிப்பால் பல சமயம் தனிமையில் அழுகை என் வழக்கமாயிற்று. எங்கே அவர்கள் மத்தியில் நான் உருக்குலைந்து விடுவேனோ என்று சேகருக்கு பயமாகி விட மிகுந்த முயற்சியின் பேரில் டெஹ்ராடூனுக்கு மாற்றலாகி வந்தோம் இருவரும். புதிய இடம்... புதிய சூழல்... தெரியாத மனிதர்கள்... வாழ்க்கை மீண்டும் சுவாரசியமாக ஆரம்பித்தது எங்களுக்கு... சேகரின் அன்பும் அரவணைப்பும் காலம் மறக்க செய்தன. குளிர் பிரதேசத்தில் நெருக்கம் மேலும் இயல்பாய் மலர்ந்தது. குறைகள் மறந்து வாழ்க்கை வெகு இயல்பாய் மாறிப்போனது. அவரை நான் எப்போதும் விட அதிகமாய் நேசித்தேன். ஆனாலும் வருடங்கள் கடக்க, சில நேரங்களில் ஏதும் இட்டு நிரப்ப முடியாத வெறுமையொன்று எங்களது அழகான வீட்டிலும், ஏன், உறவிலும் கூட நிலவுவதாய் தோன்றும். அதை குழந்தை இல்லாதவர்களால் மட்டுமே உணர முடியும்
நாளடைவில் சில நேர வெறுமைகள் நீள ஆரம்பித்தன. அத்தகைய ஒரு பொழுதில்தான் சேகர் குழந்தையை தத்தெடுப்பதை பற்றி என்னிடம் பேசத்தொடங்கினார்.ஒரு நாள் எனக்கும் இந்த யோசனையில் சம்மதம் தோன்ற, இருவருமே சென்னைக்கு கிளம்பினோம். அங்கே உள்ள ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் தத்தெடுக்க அவருக்கு விருப்பம். அந்த அமைப்பை பற்றி சேகருடைய நண்பர் ஒருவர் சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தார் குறிப்பாக அமைப்பின் நிறுவனரைப்பற்றி. அவரைப் பார்த்து பேசியதுமே, சர்ட்டிஃபிகேட் எத்தனை உண்மை என்று புரிந்தது. நாங்கள் சில மாதங்கள்/நாட்கள் வயதேயான குழந்தையையே தத்தெடுக்க விரும்பினோம். அப்போதுதான் குழந்தைக்கு எங்கள் மீதான பிடிப்பு இயல்பாக வரும் என நினைத்தோம்.
அதிர்ஷ்டவசமாக அப்படி 2 மாதங்களேயான ஒரு பெண் குழந்தை அங்கே இருக்க ஒரு வக்கீலின் உதவியுடன் தத்தெடுப்பிற்கான ஃபார்மலிட்டீஸ் முடிக்கப்பட்டன. சேகர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். "அழகா இருக்கால்ல ராதி குட்டிப்பாப்பா?" என்ற அவர் முகத்தை பார்க்கையில் எனக்குமே சந்தோஷமாய் இருந்தது. குழந்தையின் பிறப்பு விவரங்கள் எதுவுமே அந்த இல்லத்தில் அறிந்திருக்கப்படவில்லை. மெடிக்கல் காரணங்களுக்காக கேட்ட போது, "illegitimate child" என்ற ஒற்றைப்பதில் தான் கிடைத்தது. என் கைகளில் இருந்த அவளை பார்த்தேன். ரோஜாப்பூ குவியலாய் மலர்ந்தது போலிருந்தது. என்ன முத்திரை இது? "illegitimate child??" இவளுக்கு தெரியுமா இது? சிலர் வருடக்கணக்காய் தவமிருக்க, வேண்டாத இடத்தில் பிறந்து புறக்கணிக்கப்பட்டு... நினைக்கவே வலித்தது எனக்கு.
குழந்தையுடன் நாங்கள் டெஹ்ராடூனுக்கு வந்து 2 மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் ரோஜாப்பூ குவியலுக்கு "சுஜா" என்று பெயரிட்டுள்ளோம். குழந்தை ஒவ்வொரு நாளும் புதிதாய் வளர்வது போலிருந்தது. இப்போது தான் தலை கொஞ்சம் நின்றிருக்கிறது. எங்களுக்கு பொழுதெல்லாம் இவளுடன் தான் போகிறது. நான் என் வேலையையும் ராஜினாமா செய்தாகி விட்டது. சுஜாக்குட்டி நன்றாக விழித்து விழித்து எங்கள் முகங்களை பார்க்கிறாள். நான் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருக்க அடிக்கடி அவளது பொக்கை வாய் திறந்து சிரிக்கிறாள். அந்த ஒரு சிரிப்பு போதும் அவளுக்கு எல்லாரையும் கவர்ந்திழுக்க...
சேகருக்கு ஆஃபீஸை தவிர மற்ற நேரமெல்லாம் சுஜாதான். அவளை கொஞ்சுவதற்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் பிறக்கும் என்றே தெரிவதில்லை.நித்தம் ஒரு புதுப்பெயர்தான் அவளுக்கு அர்த்தம் புரியாத அழகு மொழிகளில்.. எல்லாவற்றுக்கும் அவளது பதில் விழிப்பும், சின்ன சிரிப்பும் தான். அவளை இங்குள்ள குழந்தைனல மருத்துவரிடம் காட்டியதில் சில இரத்த பரிசோதனைகள் அவசியம் என்று செய்ய சொன்னார்.hஇவ் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த. மேலும் கொஞ்சம் மாறுகண் போல இருக்கிறது என்று கண் பரிசோதனை வேறு குட்டிமாவிற்கு. அங்கே அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்ட பின்பு நாங்கள் நிம்மதியாக மூச்சு விட்டோம்.சுஜாக்குட்டி இப்போது நன்கு கொழுக் மொழுக் என்றிருக்கிறாள். குழந்தை கொஞ்சம் ஓவர்வெயிட் என்று டாக்டர் சொல்ல அப்படி ஒரு கோபம் வந்து விட்டது அவருக்கு. "உங்களை ஓவர்வெயிட்டுனு சொன்னால் கூட இவ்ளோ கோபம் வராது போல உங்களுக்கு" என்று அவரை சீண்டிக்கொண்டிருந்தேன் அன்று முழுதும்.
மருத்துவர் அறிவரைப்படி அவளுக்கான "artificial milk formulations" எல்லாம் கரைத்து புகட்ட கற்றுக்கொண்டேன்.அவளுக்கு புட்டிப்பால் புகட்ட அவள் சின்ன அதரங்கள் திறந்து "சப் சப்" என்று சப்தமிட்டு அதை குடித்துக்கொண்டே என்னைப் பார்த்து விழிக்கையில் எல்லாம் என்னுள் சிறு சிறு நெகிழ்வுகள் தோன்றும். "என்னால் இவளுக்கு பால் புகட்ட முடியவில்லையே" என்று வருந்துவதுமுண்டு. தத்தெடுத்த குழந்தையிடம் என்னால் முழுமையாக அன்பு செலுத்த முடியுமா என்ற என் பழைய சந்தேகங்களையெல்லாம் தன் பிஞ்சுக் கால்களால் உதைத்துக்கொண்டிருக்கிறாள் என் சுஜாக்குட்டி.
தோளில் சாய்த்துக்கொள்கையில் என் முந்தானையெல்லாம் ஜொள்ளு விட்டு ஈரமாக்குவாள். என்னுள் தாய்மை பெருகச் செய்யும் வித்தைகளை எல்லாம் அவள் தன் சின்ன சின்ன விரல்களிலே வைத்திருப்பதாக சில சமயம் எண்ணுவேன். வாழ்க்கை வெகுவாக மாறி விட்டிருந்தது எனக்கும் அவருக்கும். சுஜாக்குட்டி எங்கள் நெருக்கத்தை பல மடங்கு அதிகரித்து விட்டிருந்தாள். மீண்டும் புதிதாய் வாழத்தொடங்கியது போலிருக்கிறது.

அன்று... அவர் ஆஃபீஸ் கிளம்பி விட்டார். என் வேலைகள் எல்லாம் முடிந்து சுஜாக்குட்டிக்கு பால் புகட்டிக்கொண்டிருந்தேன். திடீரென டெலிஃபோன் அலற, சுஜாக்குட்டியை பத்திரமாக தொட்டிலில் கிடத்தி விட்டு, எழுந்து சென்று ரிஸீவரை எடுத்து "ஹலோ" என்றேன் சுஜாவின் மீது ஒரு கண் வைத்தப்படியே. "மிஸஸ் ராதிகா சேகர்?" என்றது மறுமுனை. "எஸ்" என்றேன். "வீ ஆர் ஸாரி டூ சே திஸ். உங்கள் கணவருக்கு அலுவலகம் வரும் வழியில் ஒரு மோசமான சாலை விபத்து நேர்ந்து விட்டது.கார் லாரியில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.இப்போது அவர் உடல் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வந்தீர்களானால்..." போனில் ஆங்கில வாக்கியங்கள் தொடர்ந்து கொண்டே போக, என் மனதில் அவற்றுக்கான தமிழாக்கங்கள் எப்போதோ நின்றுப்போயிருந்தன.

Wednesday, May 6, 2009

என் இனிய சுஜா... 2

என் இனிய சுஜா... 1




அவரது அலுவலக நண்பர் உதவியுடன் அவரது சவப்பெட்டியை விமானம் வழியே சென்னை அனுப்பி, நானும் சுஜாவும் சென்னை வந்து சேர்ந்தோம் ஆகாய மார்க்கத்தில். என்னை சுற்றி ஏதோ ஒன்று, என்னுள் ஏதோ ஒன்று இறுகி விட்டது போலிருந்தது. என்னால் வாய் விட்டு அழ‌ முடியவில்லை. எப்போதும் என் இறுக்கமான அணைப்பில் சுஜாக்குட்டி இருந்தாள். சேகரின் மீது ஏனோ திடீரென கோபம் வந்தது ஒவ்வொரு சமயங்களில். இப்படி திடீரென தனியே விட்டு விட்டு சென்றால் என்ன செய்வேன் என அவருக்கு எண்ணமே இல்லையோ என்றுக்கூட முட்டாள்தனமாய் யோசித்தேன்."ராதிகா" என்று அழைக்கும் அவர் குரல், கண்களுடன் சேர்ந்து சிரிக்கும் அந்த‌ இதழ்கள் என ஏதேதோ நினைவுக்கு வந்தன. உயிர் பிரியும் போது என்னவெல்லாம் நினைத்திருப்பார் என்றெல்லாம் எண்ணி தன்னிரக்கம் சுரந்தது.



சென்னை வந்து சிறிது நேரத்தில் அவர் உடலை தகனம் செய்தாயிற்று.எனது நாத்தனார், மாமியார், மாமனார்,கொழுந்தனார் என பல உறவுகளும் சூழ்ந்துக் கொண்டு விபத்தை விசாரித்தனர். அதை விட முக்கியமாய் சுஜாக்குட்டியை தத்தெடுப்பதை பற்றி பல கேள்விகள் கேட்டு ஆராய்ந்தனர்.சில பல வருடங்கள் முன்பு எங்களுக்கு குழந்தையில்லை என்பதை பற்றி யாரேனும் பேசினாலே எனக்கு பரிந்துக் கொண்டு வருவார் அவர். இப்போதும் இவர்கள் விசாரிக்கும் போது எங்கிருந்தோ அவர் எனக்காக பரிந்து கொண்டு வருவார் என்று அசட்டுத்தனமாய் தோன்றியது. 'சேகர்? என்னால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியவில்லை. இங்கே வாங்களேன் ப்ளீஸ்' என்று உள்மனம் அரற்றியது. தாங்காமல் உடைந்து அழ ஆரம்பித்தேன். அணையை யாரோ திறந்து விட்டது போல அழுகை அடங்க மறுத்து வந்துக் கொண்டேயிருந்தது.




அந்த கூட்டத்தில் ஒருவர், "எல்லாம் இந்த குழந்தை வந்த நேரமாத்தான்பா இருக்கும். ஊர், பேர், குலம், கோத்திரம் எதுவும் தெரியாததை பெரியவங்க கிட்டக் கூட அனுமதி கேட்காமல் இவங்களா தத்தெடுக்கிட்டாங்க... வந்து இரண்டு மாசமாகலை. நம்ம புள்ளைய முழுங்கிடுச்சு. சாகற வயசா அவனுக்கு?" என்று மேலும் மேலும் ஏதோ பேசிக் கொண்டே போக, திடுக்கிட்டு தலை நிமிர்ந்தவள், என் சுஜாக்குட்டியை பார்த்தேன். அறிமுகமில்லாத கூட்டத்தில் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தாள் அவள். பாய்ந்து அவளைத்தூக்கி அணைத்து இறுக்கிக் கொண்டேன். அவரது காரியங்கள் முடிந்த கையுடன் அவரது அம்மாவிடம் "அத்தை! நாங்க எங்க ஊருக்கு போறோம்" என்றேன். "எங்க" என்றார் என் முகத்தைப் பார்க்காமலே. "டெஹ்ராடூனுக்கு". "அங்க போய் தனியா என்ன பண்ணப்போறே?". "சுஜாக்குட்டி கூடத்தான் போறேன்". "இங்க பாரு ராதிகா!பைத்தியம் மாதிரி உளறாதே! இங்கயே இரு! இந்த குழந்தையை சென்னையில் தானே தத்தெடுத்தீங்க! அதே இடத்திலேயே திரும்பி ஒப்படைச்சிடலாம். அதுக்கான வழியெல்லாம் பெரியவன் விசாரிச்சுட்டான். உனக்கு இங்க எந்த குறையும் இல்லாம நாங்க பார்த்துக்கறோம். சேகரோட வேலைக்கூட உனக்கு கிடைக்கச் செய்யலாமாம். நீ இங்கேயே இரு" என்றார்.

'என்ன உலகம் இது? நான் குழந்தையில்லாமல் இருந்த போதும் பழித்தார்கள். இப்போது ஒரு குழந்தையோடு இருக்கும் போதுமா பழிக்க வேண்டும்? இதென்ன சேகர்? இப்போதுதான் உங்கள் அருகாமையும் அணைப்பும் எனக்கு அவசியமாய் தேவைப்படுகிறது! i badly need you சேகர்! வந்து விடுங்களேன் ப்ளீஸ்! இந்த சுஜாக்குட்டின்னா உங்களுக்கு உயிராச்சே? இவளைப் பார்த்து எமன் என்று சொல்கிறார்கள் சேகர்' என்று உள்ளே அழுதுக்கொண்டிருந்த எனக்கு திடீரென தோன்றியது. "ஏன் சேகர்? இப்படி ஏதாவது ஆகி, நான் யாருமில்லாமல் தனியா நிற்கக் கூடாதுன்னு தான் என் மனசை மாத்தி சுஜாவை எனக்கு கொடுத்துட்டு போனீங்ககளா? தாங்க் யூ சேகர் தாங்க் யூ". என் மன‌துக்குள் அவரை முத்தமிட்டேன்.பின் என் மாமியாரைப்பார்த்து "இல்லை அத்தை!என்னால சுஜாவை விட்டுட்டு இருக்க முடியாது. அவளை என் கூட இங்க வெச்சுருந்தாலும் உங்க யாராலயும் பொறுத்துக்க முடியாது. அதனால நான் அவளைக் கூட்டிக்கிட்டு போறேன்" என்று விட்டு கிளம்பி விட்டேன் யாருடைய பேச்சையும் காதில் போட்டுக்கொள்ளாமல்... இதோ என் பயணம் ஆரம்பமாகி விட்டது. என் சுஜாவை இறுக்கி அணைத்துக்கொண்டு...

Saturday, May 2, 2009

கடற்கரையில் ஒரு மாலை...




எதிர்பார்த்து நிற்கையில் கால் விரல்களை மட்டுமே தீண்டிச்சென்று,
சலிப்புடன் திரும்புகையில் வேகமாய் வந்து இடை நனைக்கும் பேரலைகள்...
எஙிருந்தோ மிதந்து வந்து முகத்தில் பட்டுத்தெறிக்கும் சோப்புக்குமிழிகள்...
இலக்கின்றி வானில் போக்கு காட்டி அலையும் காற்றாடிகள்...
பார்க்கும் காட்சிகளனைத்தும் உன் காதலையே நினைவுப்படுத்துகின்றன...
நெருங்கி விலகி அலைகளாய் உன் நினைவுகள்...
மீண்டும் வீடு திரும்புகிறேன் உயிர் நனைத்த‌ காதலுடன்...

Tuesday, March 31, 2009

வானரம் ஆயிரம்



நீங்க யாராவது எக்ஸாம்ல பிட் அடிக்கிறது, copy அடிக்கிறது போன்ற சாதனைகளை பண்ணியிருக்கீங்களா? அப்படி பண்ணியிருந்தீங்கன்னா நிஜமாவே அது பெரிய வீரசாகசம் தாங்க... எவ்வளவு தில்லு வேணும் இதெல்லாம் பண்றதுக்குனு நான் புரிஞ்சுக்கிட்டது 7வது படிக்கும் போது...
நான் சின்ன வயசுலருருந்தே நல்லா படிக்கிற பொண்ணு. எப்பவுமே 1st ரேங்க் தான்(அட உண்மையாத்தான்ப்பா...)இப்படி போட்டியே இல்லாம 7வது வகுப்பு வரைக்கும் வந்துட்டோம். அப்போ தான் என் கிளாசுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்தா 'காயத்ரி'னு... வந்தவ ஃபர்ஸ்ட் ரேங்க்கை தட்டி பறிச்சுட எனக்கு ஒரே கடுப்பாயிடுச்சு.
எப்படியும் அடுத்து குவாட்டர்லி எக்ஸாம்ல நாம தான் 1st ரேங்க் எடுக்கணும்னு மும்முரமா களத்தில் இறங்கினேன். நான் அப்போ எங்க ஸ்கூல்லயே ப்ரைவேட்டா கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டிருந்தேன்.(வீட்ல என்னிக்கு நம்மை நிம்மதியா விட்டிருக்காங்க?) அந்த கம்ப்யூட்டர் லேப்லதான் எங்க ஸ்கூல் எக்ஸாமுக்கான கேள்வித்தாள்கள் எல்லாம் தயாராகும் போலிருக்கு.பரீட்சை ஆரம்பிப்பதற்கு முதல் நாள் எப்பவும் போல நானும் என் ஃப்ரெண்டும் கம்ப்யூட்டர் கிளாஸுக்கு போனோம். ரெண்டு பேரும் ஏதோ சின்சியரா பொட்டி தட்டிக்கிட்டு தான் இருக்கும் போது என் ஆருயிர் தோழி சும்மா இருக்காம கீழே இருந்த குப்பைத்தொட்டிய வெறிச்சு பார்த்துட்டு இருந்தவ, "இதென்னடி கார்பன் காபி மாதிரி இருக்கு" என அதிலிருந்து எதையோ எடுத்தாள்.ரெண்டு பேரும் அதென்ன என்கிற ஆராய்ச்சியில் இறங்கினோம்.(நாமதான் அப்பவே சயின்டிஸ்டுல!) அப்போதான் தெரிஞ்சுது அது எங்க எக்ஸாம் கொவஸ்டின் பேப்பர்ஸ் டைப் பண்ண யூஸ் பண்ணின கார்பன் காப்பினு... கைல மாட்டினதும் 7ஆம் கிளாஸ் பேப்பர். அப்படியே ரெண்டு குப்பைத்தொட்டிய கிளற, எல்லா சப்ஜெக்ட் பேப்பர்சும் சிக்கிடுச்சு...



எல்லாத்தையும் எடுத்துக்கிட்ட சந்தோஷத்துல தலைகால் புரியல எங்களுக்கு! குவாட்டர்லி எக்ஸாம்ல நான் 1st ரேங்கும் காயத்ரி 2nd ரேங்கும் வாங்கற அற்புத காட்சி அப்படியே கண் முன்னாடி விரியுது!குதூகலமா ரெண்டு பேரும் ட்யூஷன் வந்து சேர்ந்தோம்.(வீட்ல என்னிக்கு நம்மை நிம்மதியா விட்டிருக்காங்க?... ரிப்பீட்டு)
அங்கயும் போய் இதப்பத்திதான் சீரியஸ் டிஸ்கஷன். "என்ன அங்க பேச்சு" என்று அதட்டிய டீச்சரிடம், "ஒண்ணுமில்ல மிஸ்" என்று சொல்லி படிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டே டிஸ்கஸ் பண்ணதுல ஒரு மாஸ்டர் பிளான் உருவாயிடுச்சு. நாங்க எவ்ளோ இரகசியமா பேசியும் எங்க கிளாஸ்மேட் ஒருத்தி பக்கத்தில் உட்கார்ந்திருந்தவ இந்த விஷயதை ஒட்டு கேட்டுருக்கா."எனக்கும் கொவஸ்டின் பேப்பர்ஸை காமிக்கணும். இல்லனா மாட்டி விடுவேன் மிஸ்கிட்ட" அப்படினு மிரட்ட ஆரம்பிசுட்டா(என்னா வில்லத்தனம்?) சரின்னு அவளையும் சேர்த்துக்கிட்டோம். ட்யூஷன் முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு வந்து ஒளிச்சு வெச்சுருந்த பேப்பர்ஸை எடுத்து ஆசையா பார்த்தோம். அப்போதான் கார்பன் பேப்பர்ல இருந்து எப்படி படிக்கிறதுனு டவுட்டு வந்துச்சு எங்களுக்கு."அதை xerox... எடுத்துடலாமா" என்று 3வது கூட்டாளி கேட்க "இது கருப்பா இருக்கே, ஜெராக்ஸ்ல வருமா?" என்று நான் கேட்க, "கடைக்காரனையே கேட்டு பார்ப்போம்?"னு மூணு பேரும் ஜெராக்ஸ் கடைக்கு போனோம்.



அங்க இருந்தவர் கிட்ட ஸ்டைலா தலைவி(நாந்தாங்க:)) கார்பன் பேப்பர்களை நீட்டி "இதெல்லாம் 3,3 காப்பி ஜெராக்ஸ் எடுக்கணும்"னு சொன்னேன். அந்த கடைக்காரர் ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துட்டு, அதுல ஒரு பேப்பர எடுத்து ஒரு வெள்ளை பேப்பர்ல வெச்சு அது கொவஸ்டின் பேப்பர்"னு கண்டுபிடிச்சுட்டார். அதுல வேற தெளிவா ஸ்கூல் பேரு, என்ன கிளாஸுனு போட்டு இருந்தது."எப்படி இது உங்களுக்கு கிடைச்சுது" என அவர் கேட்க "ஜெராக்ஸ் எடுக்க முடியுமா முடியாதா" என்று எகத்தாளமாக தலைவி மீண்டும் கேட்டார். "கொஞ்சம் இருங்க! எடுத்து தர்றேன்" என்றவர் பக்கத்தில் இருந்த டெலிஃபோனை சுழற்றியது எங்க ஸ்கூல் பிரின்ஸிபாலுக்கு. அவர் பேசும் போது தான் எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது, அந்த கடையே எங்க பிரின்ஸியோடதுதான்(இவங்கல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டா சைடு பிஸினஸ் ஆரம்பிக்கிறாங்க)."அங்கிள் ப்ளீஸ் அங்கிள்! போனை வெச்சுடுங்க!நாங்க போயிடறோம்" என ஓடிப்போகாமல் அங்கயே நின்னு தலைவி கெஞ்சிட்டு இருக்கும் போதே என் ஆருயிர் தோழியும், 3வது கூட்டாளியும் ஓடிப்போயிட்டாங்க. பிரின்ஸியும் அங்கு வந்து சேர என்குவைரி செஷன் ஆரம்பமானது. "என் பேர், ஓடிப்போன கயவாளிகள் பேரு, எந்த கிளாஸ்"னு எல்லாத்தையும் மிரட்டலின் பேரில் தலைவி உளறி விட்டு பின் விடுவிக்கப்பட்டாள்





சோகமாய் நடந்து வந்த எனக்கு தெருமுனையில் பாவமான மூஞ்சியோட நின்னுட்டு இருந்த கயவாளிகளை பார்த்ததும் கோபம் கோபமாய் வந்த்து."என்னடி ஆச்சு"னு கேட்டவங்க கிட்ட "நம்ம பேரெல்லாம் எழுதுக்கிட்டாரு பிரின்ஸி"னு புள்ளைக ரொம்பவே பயந்து போயிட்டாங்க. "இப்போ என்ன பண்றது?" என கேட்டவர்களிடம் "பேசாம பிரின்ஸிகிட்ட இனி இப்படி பண்ணலனு மன்னிப்பு கேட்போமா?" என்று யோசனை சொன்னது தலைவிதான். 3பேரும் அங்க போனா கடை பூட்டியிருக்கு."பிரின்ஸி வீடு பக்கத்திலதான். அங்கயே போயிடுவோமா?"‍இப்போது யோசனை 3ஆம் கூட்டாளியிடமிருந்து. அப்பவே இரவு ஒன்பது மணி. சரின்னு மூணு பேரும் அங்க போய் நின்னா, எங்க பிரின்ஸி ஈஸி சேர்ல சாஞ்சுக்கிட்டு விசாரணையை முதல்ல இருந்து தொடங்கிட்டாரு அவங்க வீட்டு வராந்தாலேயே. அந்த பக்கமா எங்கயோ சைக்கிள்ல‌ போன ஆருயிர் தோழியோட தம்பி எங்களை அங்க பார்த்துட்டு போய் அவ வீட்ல சொல்லிட்டான். ஏற்கனவே எங்க மூணு பேரையும் காணோம்னு தேடிட்டு இருந்த எங்க குடும்பம் பிரின்ஸி வீட்ல அசெம்பிள் ஆயிடுச்சு."சார்!நான் எப்பவும் 1st ரேங்க் தான் எடுப்பேன் இனி இப்படில்லாம் பண்ண மாட்டேன்" என தலைவி அழுது கொண்டே சொல்ல, உடனே ஆருயிர் தோழி "நான் எப்பவுமே 2ND ரேங்க் தான் சார்" என்றாள். "நான் எப்பவுமே 3rd ரேங்க் தான் சார்" இது 3ஆம் கூட்டாளி(மேடம் மினிமம் 3 சப்ஜெக்க்ட்டாவது ஃபெயில் ஆவாங்க). இதை கேட்டுட்டு எங்க பிரின்ஸி எங்க யாரையுமே நம்பாம கேவலமே ஒரு லுக்கு விட்டுட்டு விசாரணையை தொடர்ந்தார். நைட் இன்னும் சாப்பிடாத்தால டயர்டாயி நாங்க கெஞ்சறத நிறுத்திட்டோம். 2 மணி நேரம்... கதற கதற எங்க வீட்டில இருக்குறவங்க கெஞ்சி கூத்தாடி "இனி இப்படிலாம் பசங்க பண்ண மாட்டாங்க! விஷயத்தை பெருசு பண்ண வேணாம்"னு சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வர நைட் 11 மணி ஆயிடுச்சு.வீட்டுக்கு வந்து தனியா ஒரு விசாரணை கமிஷன். தலைவி இப்போது தேம்பி தேம்பி விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். " ஏன் அக்கா அழர"னு என் தம்பி கிட்ட வந்து கேட்க, "ஒண்ணுமில்லடா அந்த கார்பன் பேப்பர் எல்லாத்தையும் அவங்களே எடுத்துக்கிட்டாங்கடா" என்றவளை எங்கப்பா முறைச்சாரு பாருங்க! அதுக்கப்புறம் இந்த வீரசாகசம் பக்கமெல்லாம் போறதே இல்ல!....

பி.கு: மூன்று வானரங்கள் சேர்ந்து செய்த சேட்டை என்பதால் இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றப்படி இது யார் எதிர்பார்ப்பையும் புண்படுத்துவதற்கல்ல;)))


Saturday, March 21, 2009

மடி சுமந்த மரணம்




என் பத்து மாதக்கனவு பலித்தது...
ரோஜாக்குவியலாய் தொட்டிலில் மலர்ந்தாய்...
உன் அழுகுரல் அமுதமாய் ஒலித்த போது,
என் பிரசவ அலறல்கள் மறந்து போயின...
உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...
நான் கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினேன்...
'அம்மா' என்று என்னை எப்பொழுது அழைப்பாய்?
என் விரல் பிடித்து எப்போது நடை பழகுவாய்?
சிற்றாடை இடை உடுத்தி, பூச்சரம் வைத்து,
நெற்றி பொட்டிட்டு வளையல்கள் குலுங்க‌
சிறுமியாய் நீ வளர்ந்திடும் அழகு...
நினைக்கவே நெஞ்சம் இனிக்கின்றது என் கண்ணே!!!
நான் நினைவு திரும்புவ‌தற்குள் உனக்கு நாள் குறித்து விட்டனர்...
மனம் இருப்பின் மட்டுமே மனிதர்கள் என அறியப்படுவர்...
இவர்கள் ‌மனித உருவில் நடமாடும் மிருகங்கள்...
தாய்ப்பால் கள்ளிப்பால் ஆகிறது...
உயிர் கொடுத்த‌வ‌ன் உன‌க்கு எம‌னாய்...
கால‌ன் இப்போதெல்லாம் எருமையில் மட்டுமே வருவதில்லை...
இந்த வெளிச்ச உலகிற்கு நீ வந்திருக்கவே வேண்டாம்... என்
இருட்டான கருவறையே உனக்கு பாதுகாப்பு....

Monday, March 9, 2009

யாரேனும் பார்த்ததுண்டோ?




முந்தியடிக்கும் கூட்டம்...
மூச்சுவிட முடியாத நெரிசல்...
மோசமாய் கிடக்கும் சாலை...
மெதுவாய் நகரும் மனிதர்கள்..
பொதுவாய் அணுகும் சாலையோர வியாபாரிகள்...
அங்கங்கே கேட்கும் கூச்சல்...
பண்டிகை நாட்களின் முந்தைய மாலைகளில்
மும்முரமாய் திநகர் இரங்க‌நாதன் தெருவை கடக்கையில்
இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))

பெண் என்றொரு கவிதை



நகரப்பேருந்து ரோமியோக்களின் காதற்பெருக்கினால் ஏற்படும் அவதிகளும்,
பணிபுரியும் இடங்களில் உடனுறையும் ஜொள்ளர்களால் ஏற்படும் சங்கடங்களும்,
பணத்துக்காய் ஆடை துறக்கும் நமீதாக்களும் நயந்தாராக்களும்,
அன்னக்கரண்டியே கைகளாய் மாறிப்போன பல அம்மாக்களும்,
அலுவலகம், வீடு என அயராமல் அல்லல்படும் அணங்குகளும்,
தானே விலை கொடுத்து அடிமையாய் போகும் மணப்பெண்களும்,
இன்னமும் கண‌வனின் சந்தேகத்துக்காய் தீக்குளிக்கும் சீதைகளும் என,
யுகங்கள் கடப்பினும்,
இதிகாசங்கள் மறப்பினும்,
பெண்களின் நிலையில் அவ்வளவாய் மாற்றமில்லை,
எங்கள் இந்தியத்திருநாட்டில்...
எனினும் இங்கு நாங்களும் விமரிசையாய் கொண்டாடி முடித்தோம் மகளிர் தினத்தை...